எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 10, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 87

லட்சுமணனை என்ன செய்வது என்று ராமர் யோசித்தார், தன்னுடைய மந்திரி, பிரதானிகளையும், முக்கிய பெரியவர்களையும் அழைத்து, தன் சகோதரர்களையும் அழைத்து நடந்த விஷயத்தைக் கூறுகின்றார். தன் குல குருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்கின்றார். வசிஷ்டர், கூறுகின்றார்:"ராமா, உன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பது நன்கு புரிகின்றது. லட்சுமணனிடம் இருந்து நீ கட்டாயம் பிரிந்தே ஆகவேண்டும். இப்போது நீ லட்சுமணனைக் கைவிடுவதே சரியானது. காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. நீ கொடுத்த வாக்கை எக்காரணம் கொண்டும் தவறக் கூடாது. வாக்குத் தவறுதலைப் போன்ற ஒரு அதர்மம் வேறு எதுவும் இல்லை. அது ஒன்றே மூவுலகும் அழியக் காரணமாகிவிடும், ஆகவே லட்சுமணனைக் கைவிடு!" என்று சொல்கின்றார் வசிஷ்டர்.

ராமர் அனைவர் முன்னிலையிலும் லட்சுமணனைப் பார்த்து, " நான் உன்னை விட்டு விட்டேன், இனி உனக்கும் எனக்கும் எந்த விதமான உறவு கிடையாது. உற்றவனைக் கைவிடுதல் அவனைக் கொல்லுவதற்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே நான் உன்னை இப்போது கைவிடுவது, உன்னைக் கொல்வதற்குச் சமம்." என்று கூறுகின்றார். லட்சுமணன் கண்கள் குளமாகக் கண்ணீரோடு அங்கிருந்து வெளியே செல்கின்றான். பின்னர் சரயூ நதிக்கரைக்குச் சென்று, அங்கே தர்ம சாஸ்திரப் படியும், வேத நெறிகளின் படியும் சில, நியமங்களைக் கடைப்பிடித்து முடித்து, தன் மூச்சை அடக்கி, அங்கேயே அமர்ந்தான். விண்ணில் இருந்து இந்திராதி தேவர்கள் தோன்றி, பல மஹரிஷிகளோடு அங்கே வந்து, லட்சுமணன் மீது பூமாரி பொழிந்து, அவனை மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் விண்ணுலகம் அழைத்துச் சென்றனர்.

இவ்விதம் லட்சுமணனும் பிரிந்ததும், ராமருக்கு அரசனாய் இன்னும் ஆட்சி செலுத்தவேண்டுமா என்ற எண்ணம் தோன்றி, ஒரு நாள் அரச சபையில் அனைவர் முன்னிலையிலும், தான் இனி அரசனாய் இருக்க விரும்பாததாயும், பரதனுக்கு முடிசூட்டிவிட்டுத் தான் கானகம் செல்ல விரும்புவதாயும் சொல்கின்றார். சபையில் கூடி இருந்த அனைவரும் துயரத்தில் மூழ்க, பரதனோ, தனக்கு அரசாட்சி வேண்டாம் என்றும்,ராஜ்யத்தின் மீது தனக்கு ஆசை இல்லை என்றும் சொல்கின்றான். மேலும் ராமரின் இரு பிள்ளைகள் ஆன லவனும், குசனும் முறையே அரசாளத் தகுதி பெற்றிருப்பதாயும், தென் பகுதிக்குக் குசனும், வட பகுதிக்கு லவனும் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளட்டும் என்றும், தானும் ராமருடன் போக விரும்புவதால் உடனே செய்தியை சத்ருக்கனனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்கின்றான். அவனின் தீர்மானத்தைக் கேட்டு வசிஷ்டர் ராமரிடம் பரதன் சொன்னபடி செய்வதே முறையானது என்றும் அதற்கு ஒத்துக் கொள்ளுமாறும் சொல்கின்றார். ராமரும் மீண்டும் சபையோரிடம் அவர்களின் சம்மதத்தைக் கேட்க அனைவரும் ஒருமித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு நாங்களும் வருகின்றோம், எங்களையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பின்னால் வருவதே எங்களுக்கு மிக விருப்பமானது என்று சொல்கின்றனர்.

ராமரும் அவ்வண்ணமே இசைந்து, வட கோசலத்திற்கு லவனையும், தென் கோசலத்திற்கு குசனையும் மன்னர்களாக முடி சூட்டுகின்றார். நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டு அங்கே வந்த சத்ருக்கனனும், தங்கள், தங்கள் மகன்களும் அரசாட்சியை முறையாகச் செய்வதாயும், தானும் ராமருடன் வரப் போவதாயும், கூறுகின்றான். ராமர் மறுக்கக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றான். வானரர்கள், விபீஷணனைச் சேர்ந்த அரக்கர்கள் என அனைவருக்கும் செய்தி தெரிவிக்கப் பட்டு அனைவரும் அயோத்தியில் வந்து குவிந்தனர். ரிஷிகள், கந்தர்வர்கள், அனைவரும் வந்தனர். சுக்ரீவன் தான் அங்கதனுக்கு முடிசூட்டிவிட்டு வந்திருப்பதாய்த் தெரிவிக்க, விபீஷணனும் அங்கே வந்து ராமருடன் செல்லும் நோக்கத்துடன் வந்து நிற்க, ராமர் அவனைப் பார்த்து, "விபீஷணா, இக்ஷ்வாகு குல தெய்வம் ஆன அந்த ஜகந்நாதனை வழிபட்டு வருவாய், சூரிய, சந்திரர் இருக்கும் வரையில், இந்த பூமி இருக்கும் வரையில் நீ இலங்கையை ஆள்வாய். மக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறக் கூடாது." என்று சொல்கின்றார்.பின்னர் அனுமனைப் பார்த்து, "நீ என்ன செய்யப் போகின்றாய்?" என்று கேட்க, அனுமனோ பூமியிலேயே இருக்கப் போவதாய்ச் சொல்ல, ராமர் அனுமனிடம், " உன் விருப்பப் படியே ஆகட்டும். என்னுடைய சரித்திரம் பேசப்படும் காலம் வரையில் நீ இந்தப் பூமியில் வாழ்வாய்!"
என்று சொல்கின்றார். மறுநாள் வந்தது. வசிஷ்டர் சாஸ்திரங்கள் கூறியபடி அனைத்து நியமங்களையும் செய்து முடிக்க, பரத, சத்ருக்கனர் பின் தொடர, ராமர் சரயூ நதிக்கரைக்குச் சென்றார். பிரம்மாவும், தேவாதி தேவர்களும் காட்சி கொடுக்க, வானம் அசாதாரணமானதொரு பிரகாசத்துடன் காட்சி கொடுக்க, காற்றில் நறுமணம் கமழ, பூமாரி பொழிய, தெய்வீக இசை இசைக்கப் பட, ராமர் சரயூ நதியில் இறங்கினார். பிரம்மா நல்வரவு கூறுகின்றார்:"மஹாவிஷ்ணுவே, வருக, வருக, உங்கள் இடத்திற்கு மீண்டும் வருக. உங்கள் சகோதரர்களோடு உங்கள் இயல்பை அடைவீராக. உன்னை நன்கு அறிந்தவர் எவரும் இல்லை, உன்னால் அறியத் தக்கவன், அழிவற்றவன் ஆகின்றான்." என்று முகமன் கூறுகின்றார்.

தேவாதி தேவர்களும், ரிஷி, முனிவர்களும்,"மங்களம் பெருகட்டும்!"என்று நல்வாழ்த்துக் கூற, ராமருடன் வந்த அனைவரும் நதியில் இறங்க அனைவருக்கும் அவரவர்களுக்கு உரிய நல்லுலகம் கிட்டியது. அனைத்து உலகங்களிலும், அசையும் பொருட்களிலும், அசையாப் பொருட்களிலும், ஒவ்வொரு உயிரிலும் வியாபித்து இருக்கும் மஹாவிஷ்ணு தன் நிலையை அடைந்தார்.

இந்த ராமாயண மாலா ரத்தினத்தை இதுவரை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லாம் அவன் செயல். இயக்குவதும், இயங்குவதும் அவனே.

ஓம் நமோ நாராயணாய!

"காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி!"

நாளை இதன் முடிவுரைகளும், ராமாயணத்தில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் பற்றிய குறிப்புகளும் தொடரும்.

விரைவில், அழகு தெய்வம் மெல்ல மெல்ல

1 comment:

  1. கதை முடியப்போவதை நினைத்தல் வருத்தமாக உள்ளது.உடனே “பாரதம்” துவங்க முயலுங்கள். தினமும் உங்கள் மூலமாக நல்ல வார்த்தைகளை கேட்டு பழகிவிட்டேன்....டுமீல்ஜி

    ReplyDelete