எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 21, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பலராமர் பகுதி 13


ஒரு சிலர் மனசிலே சந்தேகம் இருக்கலாம், ரோகிணி இங்கே எப்படி வந்தாள் என. கம்சனுக்குத் தான் செய்வது தீங்கே என்றாலும் வெளிப்படையாக யாதவகுலத்தினர் செய்யும் எதையும் தடுத்தால் அது தனக்கே தீமையாக முடியும் என அறிந்து வைத்திருந்ததால், வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணி தன் கணவனைச் சந்திப்பதைத் தடுக்காமல் இருந்தான். ரோகிணி கோகுலத்திற்கு அக்ரூரரால் அனுப்பப் பட்டிருந்தாலும் அவ்வப்போது வந்து தன் கணவனைச் சந்திப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்ததால் இப்போதும் அப்படியே நந்தனுடன் வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போதும் நந்தனுடன் சென்றாள். சில நாட்கள் கழிந்தன.

வசுதேவரும், தேவகியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பையும் பற்றையும் நம்பிக்கையையும் கண்ட அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளிகளின் இதயமும் இளகியது அவர்கள் பால். இத்தனை அன்பான தம்பதிகளுக்குத் தாங்கள் துரோகம் புரியவேண்டி உள்ளதை நினைத்து வருந்தினர். சீக்கிரமாய் அந்தப் பரம்பொருள் தேவகியின் வயிற்றில் தோன்றி இந்தத் துன்பத்தில் இருந்து தங்களையும் மீட்கமாட்டானா?? வியாசர் இவர்களிடம் சொன்னாராமே, அந்த வாக்கு உண்மையாக இருக்கவேண்டுமே எனத் தவித்தனர். நந்தன் கோகுலத்தில் இருந்து மதுரா வந்து வசுதேவரைக் கண்டு சென்று பத்து நாட்கள் கழிந்தபின்னர் ஒரு நாள் நடு இரவில் ஒரு படகொன்று சற்றும் சத்தம் செய்யாமல் யமுனையைக் கடந்து வசுதேவரும், தேவகியும் சிறை வைக்கப் பட்டிருந்த மாளிகைக்கு அருகே இருந்த துறையில் நிறுத்தி வைக்கப் பட்டது. அதிலிருந்து சத்தம் செய்யாமல் ஒரு மனிதன் இறங்கினான். அவன் கையில் ஒரு துணி மூட்டை இருந்தது. படகில் படகோட்டியைத் தவிர இன்னொருவரும் இருந்தார்.

படகு வருவதை மேன்மாடத்தில் இருந்து கண்டார் அக்ரூரர். அவரும் கர்காசாரியாரும் வசுதேவருக்கும், தேவகிக்கும் ஆறுதல்கள் அளிக்கவேண்டும் என்பதால் கம்சனிடம் ஏதோ வழிபாடு நடத்தப் போவதாய்ச் சொல்லிவிட்டு அங்கே வந்திருந்தனர். அக்ரூரர் மாளிகைப் படிகளில் இறங்கிச் சென்றார். வந்த இளைஞனை ஏதும் பேசாமல் ஏறிட்டு நோக்கினார் அக்ரூரர். "வ்ருஷ்ணி வம்சத்தின் கடவுளே! அக்ரூரரே! வணக்கம். நான் வந்துவிட்டேன்." என்றான் அந்த இளைஞன். அக்ரூரர் வாய் பேசாமல் அவன் கைகளில் இருந்த துணிமூட்டையைச் சுட்டிக் காட்டி என்ன எனப் பார்வையாலேயே வினவ, "ம்ம்ம்., பெண் குழந்தை,இறந்தே பிறந்தது." என்று அந்த இளைஞன் சொன்னான். அக்ரூரர் வானத்தை நோக்கிக் கொண்டு தம் இரு கைகளையும் கூப்பிவிட்டுச் சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு மெளனமாய்ப் பிரார்த்தனை செய்தார்.

அவர்களை அங்கே கண்ட காவலாளிகளில் இருவர் அக்ரூரரை நோக்கிச் சந்தேகத்துடன் வர, அக்ரூரர் அவர்களைப் பார்த்து, மெல்லிய குரலில், "கர்காசாரியாரின் உத்தரவின் பேரில் இந்த பிராமண இளைஞன் இளவரசியும் ஷூரர்களின் ராணியுமான தேவகிக்குச் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து சில மந்திரங்களின் மூலம் அவள் உடல்நிலையையும், மனநிலையையும் சரி செய்ய வந்திருக்கின்றான். நீங்கள் இருவரும் உடனே கம்ச மன்னனிடம் சென்று தேவகிக்குக் குழந்தை பிறந்துவிடும் என்பதைச் சொல்லுங்கள். இது ஆசாரியரின் ஆணை!" என்று சொல்கின்றார். ஆசாரியர்களை வெளிப்படையாக விரோதித்துக்கொள்ளக் கம்சன் கொஞ்சம் தயங்கினான். ஆகவே அந்த இருவரும் அக்ரூரரையும், அந்த இளைஞனையும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு கம்சனுக்குத் தகவல் சொல்லச் சென்றனர்.

கர்காசாரியார் இரு முதிய பெண்மணிகளுடன் அங்கே காத்திருந்தார் இளைஞனின் வரவுக்காக. அனைவரும் சில நிமிடங்கள் மெல்லிய குரலில் ஏதோ விவாதித்துக் கொண்டனர். தேவகியின் அருகே வசுதேவர் உட்கார்ந்திருந்தார். தேவகியோ படுக்கையில் படுத்துக் கொண்டு தன்னிரு கண்களையும் மூடிக் கொண்டு வசுதேவரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். கர்காசாரியார் அந்த முதிய பெண்களுடன் போகச் சொல்லி தேவகிக்கு ஆணையிட்டார். "குழந்தாய்! மனதைத் திடம் செய்து கொள்வாய்! கடவுள் உனக்கு எதையும் தாங்கும் வல்லமை அளிப்பானாக!" என்று மெல்லிய குரலில் அவள் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து அனுப்பினார்.

"குருதேவரே! கவலை வேண்டாம். அக்னிப்ரவேசத்துக்குக் கூட நான் தயார். என்னை எதுவும், யாரும் எதுவும் செய்யமுடியாது. என் மனதில் கடந்த இரு நாட்களாய் அந்த ஆதி நாராயணனும் அவன் படுத்திருக்கும் ஆதிசேஷனும் என்னைக் காத்து வருகின்றார்கள் என்ற நம்பிக்கை உண்டாகி இருக்கின்றது. எது வந்தாலும் நான் கலங்க மாட்டேன்." என்று சொல்லி விட்டு வசுதேவருக்கும், குருதேவருக்கும், அக்ரூரருக்கும் நமஸ்கரித்துவிட்டு தேவகி உள்ளே சென்றாள். ஒரு முதியவள் தேவகியுடன் செல்ல, மற்றவள் கையில் தன் கையிலிருந்த துணி மூட்டையைக் கொடுத்தான் அந்த இளைஞன். சற்று நேரம் ஒரே மெளனம். சிறிது நேரத்தில் தேவகியின் பலஹீனமான குரல் வலியை அனுபவிக்கும் வேதனையுடன் கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்துப்பின்னர் பெரிய கதறலாக வந்தது. ஒரு பெரிய அலறலுக்குப் பின்னர் ஒரு குழந்தையின் குரல். பின்னர் குழந்தையின் அழுகையும் நின்றது.

பெண்கள் வெளியே வந்தனர். "ஆண் குழந்தை பிறந்துள்ளது. அடாடா! என்ன வலிமை! குழந்தை மிகவும் திடமாக இருக்கின்றான். இவ்வளவு பெரிய குழந்தையைப் பார்த்ததே இல்லை!" என்று சொல்லி அவர்களை உள்ளே அழைக்கின்றனர். உள்ளே எட்டிப் பார்த்த அவர்களின் கண்களில் மிக மிகப் பலஹீனம் அடைந்த தேவகியும் அவள் அருகில் கிடந்த குழந்தையும் பட்டது. அவர்களில் அக்ரூரர் தான் சுயநினைவோடு இருந்தார். "சீக்கிரம், சீக்கிரம், நமக்கு நேரமே இல்லை. கம்சன் வந்துவிடுவான்." என்று அவசரப் படுத்த, தேவகி குழந்தையைக் கைகளில் எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கின்றாள். பின்னர் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குழந்தையை அந்தப் பெண்களிடம் ஒப்படைக்கின்றாள்.

முதியவள் குழந்தையைக் குளிப்பாட்டிக் கீழே விட கர்காசாரியார் தன் கைகளில் குழந்தையை எடுத்துக் கொண்டு, மந்திரங்களை ஜபித்துக் கொண்டே குழந்தையின் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிற்றைக் கட்டுகின்றார். "தேவகி இவனுக்கு என்ன பெயர் வைப்பது?" கர்காசாரியாரும், வசுதேவரும் தேவகியைக் கேட்க, தேவகி சிரித்துக் கொண்டே சொல்கின்றாள்"அவன் எவ்வளவு பலம் பொருந்தியவனாய் இருக்கின்றான்? இவன் பெயரும் பலா என்றே இருக்கட்டும்" என்கின்றாள். வசுதேவர் குருதேவரைப் பார்த்து, "தாங்கள் என்ன சொல்கின்றீர்கள் ஆசாரியரே?" என வினவ, "நான் இவனை ஸ்ங்கர்ஷணன் என அழைக்கப் போகின்றேன். இவன் தானாய்ப் பிறக்கவில்லையே, இழுத்துக் கொண்டல்லவா வந்தோம்?" என நகைக்கின்றார்.

வசுதேவர் குழந்தையைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்கின்றார். பின்னர் படகில் வந்திருந்த இளைஞனிடம் குழந்தையைக் கொடுக்கின்றார். அவன் உடனேயே அக்ரூரருடன் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகின்றான்.

3 comments:

  1. அன்புடையீர்,எனது பதிவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.
    www.onruparamporul.blogspot.com

    ReplyDelete
  2. மிக விரிவாக எழுதி வருகிறீர்கள். நன்றி...:-)

    ReplyDelete
  3. பலராமன் பிறந்த கதையை இப்போதான் படிக்கிறேன் அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete