எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 29, 2016

வெள்ளிக்கிழமை மாவிளக்குப் போடுதல் குறித்த ஓர் பகிர்வு!


மின் தமிழில் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்துக்காக முன்னர் எழுதியது கீழே பகிர்கிறேன். இன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதாலும் பலரும் மாவிளக்குப் போடுவதாலும் இது குறித்து எழுத நேர்ந்தது.  இப்போதெல்லாம் மாவிளக்குத் திரி என்றே தனியாகக் கிடைக்கிறது. அடியில் பருமனாக நுனியில் திரி ஏற்றும் இடம் மெலிதாக வருகிறது. ஆனால் நான் பஞ்சைத் திரித்துக் கொண்டு திரி செய்தே பல ஆண்டுகள் மாவிளக்கு ஏற்றி வந்திருக்கிறேன். இப்போது பஞ்சே கிடைப்பதில்லை. பஞ்சு என்றால் கடைகளில் விற்கும் பஞ்சு அல்ல. நல்ல பருத்திப் பஞ்சு. உள்ளே கொட்டை(விதை) இருக்கும் அதை எடுத்துவிட்டுப் பஞ்சைக் கைகளால் திரித்துத் திரி செய்து கொண்டு  மாவிளக்கில் போட்டு நெய் ஊற்றி ஏற்றி இருக்கிறேன். என் அம்மா வீட்டில் நல்ல வெள்ளைத் துணியை அலசி உலர்த்திக் கொண்டு அதில் உள்ளே அரிசியும் பருப்பும் வைத்துக் கட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு அதை நெய்யில் நனைத்து மாவிளக்கு ஏற்றுவார்கள். அதே போல் அங்கே மாவிளக்கு மாவு உதிரி உதிரியாக இருக்கும். ஆனால் அதுவே என் அம்மா மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடுவதெனில் அன்றே அரிசியை நனைத்து ஊற வைத்து இடித்துக் கெட்டியாக எடுத்துக் கொண்டு மாவிளக்குப் போடுவார். என் மாமியார் வீட்டில் மாவிளக்குப் போடுவதே மாரியம்மனுக்கு மட்டுமே என்பதால் எப்போதுமே கெட்டியாகத் தான் இருக்கும் மாவிளக்கு. 

சிலர் வீட்டில் இரண்டு தீபம் ஏற்றுவார்கள். சிலர் வீட்டில் ஒரே தீபம் தான். அதற்குத் தகுந்தாற்போல் மாவை வெல்லம் சேர்த்து உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் நடுவில் குழி செய்து அதில் நெய்யை ஊற்றிக் கொண்டு இலை, அல்லது பித்தளைத் தாம்பாளம், (அவரவர் வீட்டு வழக்கப்படி) போட்டு அதில் மாவை வைத்துத் திரியைப் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.கட்டாயமாய் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய் வைக்கவேண்டும். மாவிளக்குக்குப் பூச் சுற்றிப் போட வேண்டும். இனி கீழே நான் சில ஆண்டுகள் முன்னர் எழுதியவை!



மாவிளக்கு
திருமதி.கீதா சாம்பசிவம்
 
 

மாரியம்மன் என்றாலே ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. மாவிளக்குப் போடாத தமிழ்ப் பெண்களைத் தேடித்தான் பிடிக்கணும்.  அம்மன் என்றாலே மாவிளக்கும், பானகமும், துள்ளு மாவும், காப்பரிசியும் கூடவே வரும். எங்க அம்மா வீட்டிலேயும் அந்த வழக்கம் இருந்து வந்தது.  அம்மா வீட்டிலேயே மீனாக்ஷி படத்திற்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி வைப்பார். யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால் நேர்ந்து கொண்டு கோயிலுக்குப் போய்ப் போடுவதும் உண்டு.  என் மாமனார் குடும்பத்தில் குலதெய்வமே மாரியம்மன் தான்.  ஆகவே ஒவ்வொரு ஆடி, தை மாதம் தவிரவும் நேர்ந்து கொண்டு, புதுக்கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளைப் போட வைப்பது என்று வழக்கம் உண்டு.  இந்த வகையில் எங்கள் மகனுக்கு 2005 டிசம்பரில் 11-ம்தேதி திருமணம் நடந்தது.
 
 
 
இது குறித்துப் பகிரப் பல சுவையான தகவல்கள் இருந்தாலும் இந்தப் படங்கள் குறித்த நிகழ்வுகளை மட்டுமே கூறப் போகிறேன். திருமணம் முடிந்ததுமே குடும்பத்தோடு அனைவருமே குலதெய்வம் கோயிலுக்குப் போய் அபிஷேஹ, ஆராதனைகளோடு மாவிளக்கையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பவேண்டும் என்ற முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த வருஷம் கொட்டித் தீர்த்த மழையில் திருமணத்திற்கு நான் எழுந்து நடமாடியதே பெரியவிஷயமாய்ப் போச்சு.  என்றாலும் அதன் பின்னரும் விடாமல் கோயிலுக்குக் கிளம்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்.  கோயிலுக்குப் போவதற்கு முதல்நாள் மருமகளுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வு.  கல்லூரித் தேர்வுகளில் எல்லாம் நன்கு செய்திருந்த என் மருமகளும் சரி, தன் மனைவி தன்னோடு வரமுடியுமா, முடியாதா என்ன நடக்குமோ என்ற கவலையிலிருந்த எங்க பையரும் சரி காலையிலே கவலையோடு கிளம்பிப் போனாங்க. ஒருவழியாய்த் தேர்வு முடிந்து மருமகளுக்கு விசாவும் கிடைத்தது என்ற நல்லசெய்தியை அன்று மதியம் 2 மணி அளவில் சொன்னார்கள்.
 
அதே சமயம் மறுநாள் ஊருக்குப் போகமுடியாது என்ற செய்தியை நாங்கள் அவங்களிடம் சொல்லவேண்டி வந்துவிட்டது. அன்று காலைதான்  என் கணவரின் வயதான அத்தை இறந்துவிட்டதால் நாங்கள் குறைந்த பக்ஷம் ஒரு மாதத்துக்காவது கோயிலுக்குப் போய் அபிஷேஹ ஆராதனைகளோ, மாவிளக்கு நேர்த்திக்கடனோ செய்யமுடியாது என்று ஆகிவிட்டது.  பையர் ஜனவரி மாசம் தான் மனைவியோடு ஊருக்குப் போகப் போகிறார் என்பதால் நானும் பொங்கல் கழிச்சுக் கிளம்பினால் தைமாதம் கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம் என்று கூறினேன்.  ஆனால் பையரின் வேலைத் தொந்திரவால் அவரால் இருக்கமுடியவில்லை.  குறித்த தேதியில் கிளம்பிட்டாங்க.  அதுக்கப்புறமா 2007-ல் வரப்போறோம்னு சொன்னாங்க. அப்போவும் நவம்பர், டிசம்பர் தான்.  ஆனால் கார்த்திகை மாதம் இல்லை.  மாவிளக்குப் போன்ற நேர்த்திக்கடன்களை மார்கழி மாதம் செய்வதில்லை என்பதால் நான் கொஞ்சம் முன்னாலோ, அல்லது பின்னால் தை மாதமாக இருக்கும்படியோ வரச் சொல்லியும் அவங்களால் முடியலை.  மருமகள் எம்.எஸ். முடிக்கும் நேரம். கட்டாயம் இருந்தே ஆகணும் ஜனவரியில். வேறே வழியே இல்லை.
 
போனவருஷம் தான் அவங்க எங்க விருப்பப்படி கார்த்திகையில் வந்து கார்த்திகை தீபத்துக்கும் இருந்துவிட்டு, கோயிலுக்கும் அழைத்துப் போய் மாவிளக்கு நேர்த்திக்கடனையும் பூர்த்தி செய்துவிட்டு வந்தோம்.  என்னை பொறுத்தவரை ஆடிமாதம் ஒரு வெள்ளிக்கிழமையும், தை மாதம் ஒரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டுவிட்டு வந்துவிடுவேன்.  அவங்க யு.எஸ்ஸிலிருந்து வரதாலே கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும், என்றாலும் அம்மா கோவிச்சுக்கவா போறா?? நம் அம்மா தானே??

மாவிளக்கு செய்முறை
 
பச்சரிசி கால் கிலோ,
வெல்லம் பாகு கால்கிலோ தூள் செய்யவும்.
ஏலக்காய் நாலு, ஐந்து,
50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)தேங்காய்
 
நிவேதனம் செய்ய வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, பூ
 
பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.  சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.  மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  எங்க வீட்டில் சலிப்பதில்லை. நன்கு அரைத்துவிடுவோம்.  மாவாகிவிடும். வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.  பந்து போல் உருட்டவேண்டும்,  அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். எங்க வீட்டில் இரண்டு உருண்டை. உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்
 
அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.  குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் முன்னாலேயே ஊற வைக்கவும்.  இல்லாட்டி மாவிளக்கை ஏற்றும்போது உடனே எரியாமல் அணைந்து போய் பலருக்கும் மனசு கஷ்டப் படும். பஞ்சுத் திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.  இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.  பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தையும் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.  திரி நன்கு எரியும்.  நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், (இதை அம்மன் மலை ஏறிவிட்டாள் என்று கூறுவார்கள்) அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.  பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
 
துள்ளு மாவு: முன் மாவிளக்குக்குச் சொன்ன அதே அளவு பச்சரிசி வெல்லம் மற்றப் பொருட்களை  எடுத்துக்கொள்ளவேண்டும்.  மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு நன்கு காய வைத்து வெல்லத் தூளைச் சேர்த்துத் தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.  இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.
 
காப்பரிசி: வெறும் பச்சரியை ஊற வைத்து நீரை வடிகட்டிவிட்டுத், தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு, வெல்லம், ஏலக்காய்  சேர்க்கவேண்டும். இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.  குழந்தை பிறந்து காப்புப் போடும்போது செய்யும் காப்பரிசியின் பக்குவம் வேறு.
 
பானகம்: வெல்லம், நீர், சுக்கு ஏலக்காய். வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு வேண்டிய அளவு நீர் விட்டு சுக்கும் ஏலக்காயும் கலந்து கொள்ளவேண்டும்.
 

10 comments:

  1. என் பள்ளிப் பருவத்தில் ஏதோ ஒரு வேண்டுதல் என்று மாவிளக்கு போட்டுக் கொண்டிருப்பாள் அம்மா. எனக்கு மிகவும் பிடித்த பிரசாதம். தொண்டை அடைக்க வாயில் அமுக்குவேன். அப்பா போனபிறகு மாவிளக்கு வீட்டில் மலையேறி விட்டது. என் வீட்டில் பூஜை புனஸ்காரம் ரொம்பவே என்றாலும், மாவிளக்கை போடுவது விடுபட்டே விட்டது. குழந்தைகள் மொட்டைக்கு மட்டும் விளக்கு என்றாகி விட்டது.இப்போது மாவிளக்கு ஆசையும் அம்மா நினைப்பும் வந்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. மாவு உதிராக இருந்தால் தொண்டை அடைக்கும் மோகன் தம்பி! எங்க வீட்டு மாவு இளகும் பதத்திலே இருக்கும். (வெல்லம் சேர்த்ததும்) அதோட நெய்யை ஊற்றி விளக்கு ஏத்தறோமே. அந்த நெய்யோடு சேர்த்துப் பிசைந்தால் மாவு தேவார்மிதம் தான். பல சமயங்களிலும் ஊருக்குப் போய் மாவிளக்குப் போடும்போது இது தான் எனக்குச் சாப்பாடு! வெளியே சாப்பிட முடியாதே! :)

      Delete
  2. நல்ல தகவல்கள். அம்மா வீட்டில் நாங்கள் மாவிளக்கு போட்டிருக்கிறோமா என்று நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்தில் வழக்கம் இருந்தால் தான் போடுவாங்க!

      Delete
  3. சிறுவயது நினைவுகளை மீட்டி விட்டது தங்களது பதிவு பெருமூச்சுே மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது! :(

      Delete
  4. சமயபுரம் கோவிலில் மாவிளக்கை மார்பில் வைத்து நேர்திக்கடன் செய்வதைப் பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மார்பு, வயிறு போன்ற இடங்களில் வைப்பார்கள். எந்த வியாதி குணம் ஆகவேண்டுமென வேண்டிக் கொள்கிறோமோ அந்த வியாதிக்காக மாவிளக்குப் போடுவோம். எங்க பையருக்கு வயிற்றில் போடுவதாக வேண்டிக் கொண்டு போட்டோம்.

      Delete
  5. அம்மாவும் செய்வார். ருசித்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அநேகமா ஆடி, தை மாதங்களில் மாவிளக்கு ருசிக்க முடியும்! :)

      Delete